புதன், 22 ஜூன், 2011

முதல் கோனலா?


தொடக்கத்திலேயே முதல் கோணல் என்று கூறும் அளவுக்கு அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை அமைந்துவிட்டது.
எடுத்த எடுப்பிலேயே சட்டமன்ற அலுவலகம் மாற்றப்பட்டது. அடுத்த கட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்படுகிறது. ஒரு நெல்லுக்கு வைக் கப்பட்ட பெயர் கூட மாற்றப்படுகிறது என்றால், பாமர மனிதர்கூட இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளும் நிலைதான்.
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் சமச்சீர் கல்வி கைவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறது என்று கூறமுடியாது. ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிகளும் கூடத்தான் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.
இதிலிருந்தே தெரியவில்லையா? பச்சையான அரசியல் கண்ணோட்டத்தோடு - தி.மு.க. ஆட்சி செய்ததையெல்லாம் மாற்றுவது என்கிற மனப்பான் மையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பது வெளிப்படையானதாகும். இந்த ஆட்சி இப்படி ஏட்டிக்குப் போட்டியாக நடைபோடுமே தவிர, மக்கள் பிரச்சினையை திறந்த மனத்தோடு அணுகாது என்பதை எடுத்த எடுப்பிலேயே இவ்வரசு காட்டிக் கொண்டுவிட்டது.
வாக்கு அளித்தவர்களுக்கு மட்டுமல்ல - எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்ந்துதான் ஆட்சியாகும்.
அந்த மனப்பான்மை இந்த ஆட்சிக்கு இருப்ப தாகத் தெரியவில்லை. இந்தத் தன்மை வெகு விரைவில் பொது மக்கள் மத்தியில் கெட்டப் பெயரைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.
பதவியேற்ற நாளிலேயே அரசு நூலகங்களுக்கு விடுதலை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால், இதன் தன்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியுமே!
துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஆலோ சனை கொடுத்தால் துக்ளக் ராஜபரிபாலனம் தானே நடக்கும்?
சமச்சீர் கல்வி என்பது ஒட்டுமொத்தமாக மக்களால் வரவேற்கப்படும் கல்வித் திட்டமாகும். நீண்ட காலமாக ஏற்றத் தாழ்வற்ற ஒரு கல்வி முறை செயல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்துள்ளது.
அந்தக் கோரிக்கைக்கான செயல் வடிவத்தைத் தான் கடந்த தி.மு.க. ஆட்சி அளித்தது. கடந்த ஆண்டே முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு அமல்படுத்தவும்பட்டுவிட்ட நிலையில், ஆடு- ஓநாய் கதை கூறி, அத்திட்டத்தை நிறுத்துகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன?
பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் கல்வியாளர் இல்லை என்று இவ்வாட்சி கருதுகிறதா? சட்டப்பேரவையில் இதுகுறித்து முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சமச்சீர் கல்வித் திட்டம் யார் யாரையெல்லாம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது; பல தரப்பினரின் கருத்து களுக்கு மதிப்பளித்து உருவாக்கப்பட்டது என்பது குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க மசோதாவை நேற்று அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் தொடக்கத்தில் என்ன கூறினார்? பாடத் திட்டத்தில் உள்ள சில குறை பாடுகள் நீக்கப்பட்டு, இவ்வாண்டே சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று செய்தியாளர் களிடம் கூறவில்லையா?
அதற்குள் ஏன் இப்படி தலைகீழ் மாற்றம்? காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும், முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் கூறியுள்ளது சரியே என்றுதான் பொதுமக்கள் கருதுவார்கள்.
இவர்கள் வேறு கல்வி நிபுணர்களை ஏற்பாடு செய்து திட்டத்தை உருவாக்கினாலும், அதில் குறைகளையே கண்டுபிடிக்க முடியாது என்று உத்தரவாதம் கூறுவார்களா? அதிலும் குறைகள், ஓட்டைகள் என்று விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எதிலும் நூற்றுக்கு நூறு துல்லியம் என்பது கிடையாதே! இந்த நிலையில், ஓர் அரசு கொண்டு வந்தத் திட்டத்தை இன்னொரு அரசு தூக்கி எறியும் என்றால், நாட்டில் ஆட்சி நடக்காது - மாறாக, எரிந்த கட்சி, எரியாத கட்சி வில்லுப்பாட்டுதான் நடக்கும்.
எந்த மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத் தார்களோ, அதே மக்கள் திருப்பிக் குத்த எவ்வளவு நாள் பிடிக்கும்?
நிதானம் தேவை - நெருப்புப் பார்வை தேவையில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக