புதன், 22 ஜூன், 2011

பா.ஜா.கா பிழைக்கவே பிழைக்காது


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பாரதீய ஜனதா கட்சிக்குள் - உள் குத்தும் - குத்து வெட்டும் களேபரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

அடல்பிஹாரி வாஜ்பேயி உடல் நிலை காரணமாக பொது வாழ்வுக்கு முழுக்குப் போட்டு ஒதுங்கிப் போய் விட்டார். அத்வானியும் பா.ஜ.க.வில் காலாவதியான பொருளாகி விட்டார். முரளிமனோகர் ஜோஷியும் முதியோர் ஓய்வும் பணம் பெறும் நிலையில் உள்ளவர். ஜஸ்வந்த்சிங் வெளியில் போய் உள்ளே வந்ததால் அவருக்கான மூப்புரிமைத் தகுதி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. யஷ்வந்த் சின்கா இருக்கும் இடம் தெரியவில்லை.

வெங்கையாநாயுடு, ராஜ்நாத் சிங்  போன்றவர்கள் பெருங்காயம் இருந்த டப்பாவாகவே கருதப்படுகின்றனர். கட்சியின் தலைவர் நிதின்கட்காரி பொம்மையாகக் கருதப்படுகிறார். கட்சித் தலைவருக்குரிய தகுதி உடையவராக அவரை கட்சிக்காரர்கள் கருதுவதில்லை. ஒரு மாநில அளவுக்குத் தலைவராக இருக்கலாம் - அவ்வளவுதான்; இப்பொழுதுள்ள அகில இந்தியத் தலைமை அவரின் தகுதிக்கு மீறியது என்ற கருத்து கட்சிக்குள் நிலவுகிறது.

அடுத்த கட்டமாக மக்களவை பா.ஜ.க. தலைவர் திருமதி சுஷ்மாஸ்வராஜ், மாநிலங்களவைத் தலைவர் அருண்ஜேட்லி ஆகிய இருவருக்கிடையே பனிப்போர் உச்சத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. பெரும் சரிவைச் சந்தித்து விட்டது.

பா.ஜ.க.வுக்கு உள்ள ஒரே பலம் மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி  ஆட்சியின் செயல்பாடு குறைவுகள்தான்.

நாட்டின் விலைவாசி உயர்வு - ஆளும் மத்திய ஆட்சியின் மீது கடும் அதிருப்தியைத் தேடித் தந்துள்ள நிலை பா.ஜ.க.வுக்குச் சாதகமானதுதான் என்றாலும்கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி அவர்களை மேலும் பலவீனமான இடத்துக்குத் தான் இழுத்துச் சென்று குடை சாய்த்து விட்டது.

குறிப்பாக கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆளும் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வரும் போக்கும், அன்றாடம் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் நட வடிக்கைகளும், கோமாளிக் கூத்துகளும் ஆளும் பொறுப்புக்கு அக்கட்சி இலாயக்கில்லை என்பதற்கான சாட்சியங்களாகி விட்டன.

கருநாடக அமைச்சரவையில் சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்கள் உட்பட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இடம் பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஓர் அமைச்சரவையில் என்பது இதற்கு முன் கேள்விப்படாத சங்கதி.

ரெட்டி சகோதரர்கள் கட்சிக்கு 160 கோடி ரூபாய் தந்துள்ள நிலையில், அதற்கான விலையைக் கட்சி கொடுத்துத்தானே தீர வேண்டும் என்று வினா எழுப்புகிறார் சுஷ்மாஸ்வராஜ்.

ரெட்டி சகோதரர்கள் ஆட்டம் போடுவதற்கு ஊக்கம் கொடுப்பவர் சுஷ்மாஸ்வராஜ் என்று அருண்ஜேட்லி  குற்றப் பத்திரிகை படிக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்களை அமைச்சரவையில் அமர்த்தியதற்குக் காரணம் அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு, எடியூரப்பா, அனந்தகுமார் ஆகியோர் தான் என அவுட்லுக் வார ஏட்டுக்குப் பகிரங்கமாகப் பேட்டி கொடுத்துள்ளார் திருமதி சுஷ்மா.

இப்படி ஒருவர்மீது இன்னொருவர் குற்றப் பத்திரிகை படிக்கின்றனர். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல எடியூரப்பாவின் ஆட்சி கருநாடக மாநிலத்தில் கம்பியின்மேல் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு உள்குத்துகள் பா.ஜ.க.வுக்குள் நடந்து கொண்டு இருந்தும் இதன் தன்மைக்கேற்ப ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை; விமர்சிப்பதில்லை. அமுக்கமாகவும் கமுக்கமாகவும் தான் செய்திகளை கசிய விடுகின்றன.

செய்தியைப் போடாமலும் இருக்க முடியவில்லை; அப்படியே போட்டாலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்து வதாகவும் ஆகி விடக் கூடாது என்பதிலே பார்ப்பன ஊடகங்கள் கண்ணும் கருத்துமாகவே செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பார்ப்பனர்களுக்கு உள்ள உணர்வு என்னவென்றால், இந்தியா பூராவும் விலைவாசி உயர்ந்து நிற்கிறது - இந்தச் சந்தர்ப்பத்தை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக இப்படி தெரு சிரிக்க சண்டையை போட்டுக் கொண்டு திரிகிறார்களே என்கிற ஆதங்கம் - செல்லக் கோபம்தான் ஊடகங்களுக்கு.

பா.ஜ.க.வை குறை சொல்லுவதுபோல தோன்றும்.  அதே நேரத்தில் அந்தக் குறையை திருத்திக் கொள்ள வேண்டும் என்கிற அறிவுரையும் அதற்குள் பதுங்கியிருக்கும்.

எப்படியிருந்தாலும் பா.ஜ.க.வின் கொள்கைகளும், போக்குகளும், கட்டுப்பாடற்ற தன்மைகளும் ஒன்றுக் கொன்று கால்களைக் கட்டிக் கொண்டு தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமே தவிர பிள்ளை பிழைக்காது என்பதுதான் உண்மை!


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக