திங்கள், 27 ஜூன், 2011

திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா?(2)


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத் தில் கலந்து கொண்டோமா, ஏதோ நாலு வார்த்தை பேசி விட்டுச் சென்றோமா என்று கருணாநிதி வந்திருக்கலாம். தேர்தல் தோல்வியைப்பற்றிப் பேசுகிறேன் என்று ஏதோதோ உளறிக் கொட்டி யிருக்கிறார் முத்தமிழர் வித்தகர் - என்று துக்ளக் எழுதுகிறதே (22.6.2011) - ஒரு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் எதைப் பேசுவது எதைப் பேசக் கூடாது என்பதைத் துக்ளக் சோ ராமசாமி அய்யரைக் கேட்டுக் கொண்டுதான் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்களா பார்ப்பனர்கள்?

தி.மு.க. தலைவர் எதைப் பேசினாலும், எழுதினாலும் சொந்தமாக பேசக் கூடியவர் - திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்துகளை ஆதாரம் காட்டிப் பேசக் கூடியவர்தான்; திராவிட இன உணர்வு கருத்துகளை மக்கள் மத்தியில் வைக்கக் கூடியவர் தான்; அந்த அடிப்படையில்தான் திருவாரூர் பொதுக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது?

திருவாரூர் பொதுக் கூட்டத்தில் ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார் தி.மு.க. தலைவர் என்று துக்ளக் குமுறுகிறதே - அப்படி என்ன ஏதேதோ பேசியிருக்கிறார்?

தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தோற்பது திராவிட இயக்கத்தில் உணர்வு, கொள்கைகள் அல்ல என்று பேசி விட்டாராம் மானமிகு கலைஞர் - அது பொறுக்க மாட்டாமல் தான் துக்ளக் பார்ப்பன வட்டாரம் தாண்டிக் குதிக்கிறது.

தமிழ்நாட்டில் தன்மான இயக்கமும், திராவிட இயக்கமும் ஊட்டிய இனவுணர்வு கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பார்ப்பன அல்லாத உணர்வு என்பதற்கான ஒரு குறியீடுதான் வரலாற்று ரீதியான திராவிடர் என்பதாகும். பார்ப்பனர் வேறு பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் வேறு என்று பிரித்துக் காட்டுவதற்கான எல்லைக் கோடுதான் அது.

வரலாற்றில் பார்ப்பன அல்லாத மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்று இழித்தும், பழித்தும், உரிமை பறித்தும், வேசி மக்கள் என்று ஒடுக்கியும் ஆதிக்கம் செலுத்தினார்களே, அந்த நிலையிலிருந்து விடுபட்டு மானமும், அறிவும் உள்ள மக்களாக, உரிமை படைத்த இனத்தவர்களாக பார்ப் பனர் அல்லாத மக்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும் என்ற வெப்ப உணர்வை ஊட்டும் வரலாற்றுச் சுக்கான்தான் திராவிடர் என்பதாகும்.

அதனை நினைவூட்டலாமா? அதனை நினை வூட்டிக் கொண்டே இருந்தால் அது ஆரியப் பார்ப் பனர்களுக்கு ஆபத்தாயிற்றே - அவர்களின் ஆதிக்க ஆணி வேரில் வைக்கப்படும் வெடி  மருந்தாயிற்றே - அதனைத் தி.மு.க. தலைவர் செய்து கொண்டிருக் கிறாரே என்று ஆத்திரத்தில் எழுதும் அமில (ஹஉனை) வரிகள் தான் ஆரிய ஏடுகளுடையது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகம் தோன்றுவதற்கு முக்கிய வேராக இருந்த வருமான டாக்டர் வி.அய். சுப்பிர மணியம் அவர்கள் 2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை (பா.ஜ.க.) சந்தித்து திராவிடியன் என்சைக்ளோ பீடியோ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

அந்நூலைப் பெற்றுக் கொண்ட ஜோஷி, அந்நூலின் பெயரில் உள்ள திரவிடியன் என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் மத்திய அமைச்சரை நோக்கி நீங்கள் நாட்டுப் பண்ணி லிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்; நானும் திராவிடர் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன் என்றாரே!

துக்ளக் பார்ப்பனரிலிருந்து மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பா.ஜ.க. பார்ப்பனர் வரை ஒரே மாதிரி யாகவே சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய திராவிடர்கள் தெரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால் கலைஞர் அவர்கள் திருவாரூரில் ஆற்றிய உரையில் இடம் பெற்றுள்ள சாரத்தின் அருமை நன்றாகவே புரியும் - ஆரியம் ஏன் துடிக்கிறது என்கிற சூட்சமும் விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக