வியாழன், 30 ஜூன், 2011

அரசியல் மாற்றங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார்


அரசியல் மாற்றங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பெரியார் ஒளி விருதுபெற்ற தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாகும்.
தந்தை பெரியார் விருது பெறுவது எனக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், தந்தை பெரியார் அவர்களின் பணிகளுக்கு முன், நான் ஒரு தூசு என்று மிக அடக்கமாகக் கூறிய பேராசிரியர் அவர்கள், இந்த மேடையிலே நாம் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம் என்றால், இந்த மன்றத்திலே இவ்வளவு திரளாகக் கூடி நமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடிகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் - அவர் இல்லாவிட்டால் நாம் எவரும் இலர் என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைப் பதிவு செய்தார்.
தந்தை பெரியாரை எந்தக் காலத்திலும் தமிழர்கள் மறக்கக் கூடாது - அவர் கருத்தினைப் பின்பற்றத் தயங்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள்.
அரசியலில், தேர்தலில் நேற்று நாம் தோல்வி அடைந்தோம் என்றால், அது நாம் அணிந்திருந்த சட்டை கிழிந்துபோனது போன்றது - அது ஒரு கட்சியின் தோல்வியாகும்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வு- சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது வேறு - அது தோல்வி அடைந்ததாகப் பொருளாகாது என்றார் பேராசிரியர். இதே கருத்தைத்தான் திருவாரூர் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் குறிப்பிட்டார் என்பது கருத் தூன்றத்தக்கதாகும்.
இதனைத்தான் துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் - அவர்களின் வட்டாரங்கள் கேலி செய்கின்றன.
மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வருணாசிரமம் கொடியது. நான்கு வருணங்களையும், பிரம்மாவின் முகத்தில் பிராமணன், தோளில் சத்திரியன், தொடையில் வைசியன், பாதங்களில் சூத்திரன் பிறந்தான் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது?
மிகப்பெரிய வன்னெஞ்சம் படைத்தது பார்ப்பனர்களின் வேதங்களும், அவர்களின் சாத்திரங்களும். அவற்றை ஆணிவேர் வரை சென்று மூல பலத்தைத் தாக்கியவர் தந்தை பெரியார் என்பதால், நமக்குப் பெரியார் மிகவும் தேவைப்படுகிறார்.
தமிழன் என்ற ஓரினக் கோட்பாடு, இனச் சிந்தனை - ஒற்றுமை உணர்வு வருவதற்கு, வளர்வதற்குத் தடையாக இருப்பது ஜாதி உணர்வுதான் - ஜாதி நிலவும்வரை இனவுணர்வு வளராது.
தொடக்க காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியிலும், துணி துவைக்கும் சலவைத் தொழிலாளர்கள் பகுதி யிலும்தான் திராவிடர் கழக - சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் கலந்துகொண்டு அவர்கள் வீட்டில் சாப்பிட்டு வருவதைக் கட்டாயக் கடமை என்று கருதப்பட்டதை பேராசிரியர் எடுத்துக் காட்டியது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
ஜாதியின் கொடுமை தலைவிரித்தாடும் ஒரு சமூக அமைப்பில், இத்தகைய நடவடிக்கைகள்தான் - ரத்த ஓட்டத்தில் ஆண்டாண்டு காலமாகக் கலந்துவிட்ட அந்த ஜாதியின் பிடியைத் தளர்த்தும் - மன மாற்றத்தையும் கொண்டுவரும்.
அந்தக் காலகட்டத்தில் அதனைச் செய்வதற்கு ஒரு மனப் பக்குவம், துணிவு தேவை. அந்தப் பக்குவத்தை உண்டாக்கியவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட தன்மான இயக்கமான திராவிடர் கழகமுமாகும்.
இன்றைக்கும்கூட சில கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரு டம்ளர்கள் உண்டு என்றால், அந்தக் காலகட்டத்தில் சேரிப் பகுதிகளில் சென்று அவர்கள் வீட்டில் உணவருந்தியது எவ்வளவுப் பெரிய சாதனையாக இருந்திருக்க முடியும்!
அந்த உணர்வு மேலும் தூண்டப்படவேண்டும் - இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புச் சிந்தனை விதைகள் விதைக்கப்படவேண்டும்.
ஜாதிக்கு மூல ஆதாரமானவைகள்பற்றிக் கடுமையான விமர்சனங்களை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். அதன்மூலம் இனவுணர்வை ஏற்படுத்திவிட்டால் அரசியலிலும்கூட இனமானப் பார்வை ஏற்பட முடியும்.
அந்த உணர்வு குன்றியதால்தான் இனமல்லாதார் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நிலை ஏற்படுகிறது.
மிகப் பொருத்தமாக இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாடல் வரிகளை எடுத்துக் கூறினார்.
தமிழாய்ந்த தமிழ் மகன்தான்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும்
என்ற தமிழியக்கப் பகுதியில் அமைந்த அந்தப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டினார்.
அரசியல் உள்பட எல்லா வகையிலும் தமிழன் தலை எடுக்க தந்தை பெரியார் தேவைப்படுகிறார் - அவர்தம் கொள்கைகள் தேவைப்படுகின்றன என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவின் சாரமாகும். வெறும் ஆர்ப்பாட்டமாக விழாக்கள் அமையக் கூடாது என்பதில் கருத்து செலுத்திய தோழர் தொல். திருமாவளவன் அவர்களையும் பாராட்டுகிறோம்.


.

கர்நாடகாவின் ஜாதி அரசியலுக்குப் பதிலென்ன?


கருநாடகாவின் ஜாதி அரசியலுக்குப் பதிலென்ன?

கருநாடக மாநிலத்தில் லிங்காயத் என்ற பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள்; தேர்தலில் இவர்களின் பங்கு மிகவும் கணிசமானது.
கருநாடகத்தின் முதல் அமைச்சர் எடியூரப்பா இந்த சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர்.
எடியூரப்பாமீது தொடர்ந்து ஊழல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் லிங் காயத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் எடியூரப்பாவுக்காக அணி வகுத்து நிற்கிறார்களாம்.
தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக இருக்கிறார். அவரைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்கிற பாணியில் சிந்தனைகள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாக தினமலர் ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆ. இராசா - தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று கலைஞர் அவர்கள்  சொன்னபோது ஊழலுக்கு ஜாதியில்லை; மதம் இல்லை - ஜாதியைக்காட்டி காப்பாற்றப் பார்க்கிறார் கலைஞர் என்று கதையைத் தூக்கிக் கொண்டு களம் காண வந்த பார்ப்பன ஏடுகள் இப்பொழுது கருநாடகாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையைக் குறித்து, அதே கண்ணோட்டத்தில் விமர்சிக்க முன் வராதது ஏன்?
குஜராத்தில் நரேந்திரமோடி அரச பயங்கரவாதக் கதாநாயகனாக மாறி சிறுபான்மை மக்களை வேட்டையாடியதை வன்முறை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினால் அதனைப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, உண்மை உயிர் பிழைத்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் பார்ப்பனர் களுக்கே உரித்தான நயவஞ்சகமான சிந்தனையும், நரிக்குணமும் ஆகும்.
நில மோசடிப் புகார் கருநாடக மாநிலத்தையே ஒரு கலக்குக் கலக்கியது. விலை உயர்ந்த வீட்டுமனை களை தன் மகன் மற்றும் உறவினர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கம்பீரத்தை காட்டிக் கொண்டார் எடியூரப்பா.
சுரங்கத் தொழில் அதிபர்களான சகோதரர்கள் இருவருக்கும் அமைச்சர்கள் பதவி கொடுத்து, அவர்கள் எடுக்கும் கோலுக்கு எல்லாம் மந்தி(ரி)யாக ஆடினார். தொடக்கத்தில் மிஞ்சி பிறகு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எடியூரப்பா.
கருநாடக மாநில முதல் அமைச்சர் பதவியிலிருந்து இந்த மனிதரை நீக்கினால்தான் கட்சி பிழைக்கும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.
இவரோ டில்லிக்கே சென்று பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னை நீக்கிப் பாருங்கள் என்று சவால் விட்டார். அகில இந்திய பா.ஜ.க. தலைமை எடியூரப்பாவுக்கு அடிபணிந்து சலாமிட்டு ஓடிப் போய்ப் பதுங்கிக் கொண்டது. உள்ளதுக்கும் ஆபத்து வந்தால் என்ன செய்வது - தென்னிந் தியாவில் தங்களுக்கென்று இருக்கும் ஒரே ஆட்சி யையும் பறி கொடுத்து விடக் கூடாதே என்ற நினைப் பில் எடியூரப்பாவின் அத்தனை முறைகேடுகளுக்கும் வெண் சாமரம் வீசும் நிலைக்கு பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை தள்ளப்பட்டது பரிதாபமே!
தனக்கு எதிராகக் கிளம்பிய சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்.
மறைந்த கருநாடக முன்னாள் முதல் அமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எடியூரப்பா என்ன பேசினார் தெரியுமா?
பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட போதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.
தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கியுள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் (தினமலர் 4.12.2009) என்று பேசினாரே!
இப்படிப்பட்ட உத்தமப் புத்திரர்தான், ஜாதி வலைக்குள் புகுந்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.
இதெல்லாம் பார்ப்பன ஊடகங்களின் கண்களுக் குத் தெரியாது, தெரியவே தெரியாது என்று நம்பித் தொலைய வேண்டியதுதான்!

திங்கள், 27 ஜூன், 2011

ஒற்றைப்பத்தி. மூதாட்டிகள் இருவர்


இந்நாள் இரு வீராங்கனைகளை நினைவூட்டும் நாள். திராவிட இயக்க வீராங்கனை மூவலூர் ஆ. இராமாமிர்தம் (1962) அலர்மேலு அப்பாதுரையார் (2001) ஆகியோர் நினைவு நாள் இந்நாள்.

இந்த இரு வீராங்கனை களும் 1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற சீலர்கள் ஆவார்கள்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்களின் இணையரான அலர்மேலு அம்மையார் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவை மேலவை உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

1.8.1938 அன்று திருச்சி உறையூரிலிருந்து இந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும் படை தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை அவர்களின் தலைமையிலிருந்து உறையிலிருந்து வெளிப்பட்ட வாளாகப் புறப் பட்டது.

அஞ்சா நெஞ்சன் பட் டுக்கோட்டை கே.வி. அழகிரி சாமி படையை நடத்தும் தளபதியாகச் செயல்பட்டவர். நூறு பேர் கொண்ட அந்தத் தமிழர் பெரும்படையில் ஒரே ஒரு பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்றால்.

அந்தத் தீரத்தை என்னவென்று நவில் வது! நடை பயணம் என்றால் சாதாரணமானதல்ல 577 மைல்கள். படை என்னும் அந்த நதி சென்னைக் கடற்கரையில் சங்கமித்த போது அங்கு ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட ஒரு பெருங்கடல் உள் வாங்கிக் கொண்டது.

அந்த வரவேற்புப் பொதுக் கூட்டத்தில்தான் தந்தை பெரி யார் தமிழ்நாடு தமிழருக்கே! எனும் முழக்கத்தை முதன் முதலாக முன் வைத்தார். மறை மலைஅடிகள் தலைமை வகித்த அந்த மாபெரும் எழுச்சிக் கூட்டத்திலும் மூவலூர் இராமாமிர் அம்மையாரும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவாரூரில் பிறந்த அம்மையாரின் பெற்றோர் கிருஷ்ணசாமி - சின்னம்மாள்; வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும், ஒரு பழம் புடவைக் குமாக விற்கப்பட்டவர் - விலைக்கு வாங்கிக் கொண்டவர் ஆச்சிக்கண்ணு.

மூவலூரில் வாழ்ந்து வந் தாலும் ஆச்சிக்கண்ணு தம்மை வளர்த்து எடுத்ததாலும் நன்றி உணர்வோடு தன் பெயரில் மூவலூர் ஆ. இராமாமிர்தம் என்று இணைத்துக் கொண்டவர்.

காங்கிரஸ் கட்சியில் மாகா ணக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி யதும் அவரும் உடன்  வெளி யேறி சுயமரியாதை இயக்கத் தொண்டராக, பேச்சாளராக நாட்டில் வலம் வந்தார். தேவதாசி என்று கூறப்படும் சமூகத்தில் பிறந்ததால் அதன் கொடுமைகளை உணர்ந்தவர் - தாசிகளின் மோக வலை எனும் நூலை எழுதியவர். தேவதாசி முறை ஒழிப்புக்கு டாக்டர் முத்து லட்சுமிக்கு தோள் கொடுத்த மூதாட்டியை எப்படிதான் மறக்க முடியும்?
- மயிலாடன்

திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா?(2)


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத் தில் கலந்து கொண்டோமா, ஏதோ நாலு வார்த்தை பேசி விட்டுச் சென்றோமா என்று கருணாநிதி வந்திருக்கலாம். தேர்தல் தோல்வியைப்பற்றிப் பேசுகிறேன் என்று ஏதோதோ உளறிக் கொட்டி யிருக்கிறார் முத்தமிழர் வித்தகர் - என்று துக்ளக் எழுதுகிறதே (22.6.2011) - ஒரு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் எதைப் பேசுவது எதைப் பேசக் கூடாது என்பதைத் துக்ளக் சோ ராமசாமி அய்யரைக் கேட்டுக் கொண்டுதான் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்களா பார்ப்பனர்கள்?

தி.மு.க. தலைவர் எதைப் பேசினாலும், எழுதினாலும் சொந்தமாக பேசக் கூடியவர் - திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்துகளை ஆதாரம் காட்டிப் பேசக் கூடியவர்தான்; திராவிட இன உணர்வு கருத்துகளை மக்கள் மத்தியில் வைக்கக் கூடியவர் தான்; அந்த அடிப்படையில்தான் திருவாரூர் பொதுக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது?

திருவாரூர் பொதுக் கூட்டத்தில் ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார் தி.மு.க. தலைவர் என்று துக்ளக் குமுறுகிறதே - அப்படி என்ன ஏதேதோ பேசியிருக்கிறார்?

தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தோற்பது திராவிட இயக்கத்தில் உணர்வு, கொள்கைகள் அல்ல என்று பேசி விட்டாராம் மானமிகு கலைஞர் - அது பொறுக்க மாட்டாமல் தான் துக்ளக் பார்ப்பன வட்டாரம் தாண்டிக் குதிக்கிறது.

தமிழ்நாட்டில் தன்மான இயக்கமும், திராவிட இயக்கமும் ஊட்டிய இனவுணர்வு கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பார்ப்பன அல்லாத உணர்வு என்பதற்கான ஒரு குறியீடுதான் வரலாற்று ரீதியான திராவிடர் என்பதாகும். பார்ப்பனர் வேறு பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் வேறு என்று பிரித்துக் காட்டுவதற்கான எல்லைக் கோடுதான் அது.

வரலாற்றில் பார்ப்பன அல்லாத மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்று இழித்தும், பழித்தும், உரிமை பறித்தும், வேசி மக்கள் என்று ஒடுக்கியும் ஆதிக்கம் செலுத்தினார்களே, அந்த நிலையிலிருந்து விடுபட்டு மானமும், அறிவும் உள்ள மக்களாக, உரிமை படைத்த இனத்தவர்களாக பார்ப் பனர் அல்லாத மக்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும் என்ற வெப்ப உணர்வை ஊட்டும் வரலாற்றுச் சுக்கான்தான் திராவிடர் என்பதாகும்.

அதனை நினைவூட்டலாமா? அதனை நினை வூட்டிக் கொண்டே இருந்தால் அது ஆரியப் பார்ப் பனர்களுக்கு ஆபத்தாயிற்றே - அவர்களின் ஆதிக்க ஆணி வேரில் வைக்கப்படும் வெடி  மருந்தாயிற்றே - அதனைத் தி.மு.க. தலைவர் செய்து கொண்டிருக் கிறாரே என்று ஆத்திரத்தில் எழுதும் அமில (ஹஉனை) வரிகள் தான் ஆரிய ஏடுகளுடையது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகம் தோன்றுவதற்கு முக்கிய வேராக இருந்த வருமான டாக்டர் வி.அய். சுப்பிர மணியம் அவர்கள் 2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை (பா.ஜ.க.) சந்தித்து திராவிடியன் என்சைக்ளோ பீடியோ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

அந்நூலைப் பெற்றுக் கொண்ட ஜோஷி, அந்நூலின் பெயரில் உள்ள திரவிடியன் என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் மத்திய அமைச்சரை நோக்கி நீங்கள் நாட்டுப் பண்ணி லிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்; நானும் திராவிடர் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன் என்றாரே!

துக்ளக் பார்ப்பனரிலிருந்து மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பா.ஜ.க. பார்ப்பனர் வரை ஒரே மாதிரி யாகவே சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய திராவிடர்கள் தெரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால் கலைஞர் அவர்கள் திருவாரூரில் ஆற்றிய உரையில் இடம் பெற்றுள்ள சாரத்தின் அருமை நன்றாகவே புரியும் - ஆரியம் ஏன் துடிக்கிறது என்கிற சூட்சமும் விளங்கும்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

கூண்டிலேற்று ரஜபக்சேவை!திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்


கூண்டிலேற்று ராஜபக்சேவை! திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்:

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக எத்தனையோ போராட்டங்களை, மாநாடுகளை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. அதில் ஒரு சில இதோ:
18.6.1983 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத் துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 2.7.1983 அன்று சென்னை அண்ணா நகரில் புல்லா ரெட்டி அவின்யுவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எழுச்சிப் பொதுக் கூட் டத்தை நடத்தியது. அநேகமாக அக்கால கட்டத்தில் இப்பிரச்சினைக்காகத் துவக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி இது என்றே குறிப்பிட வேண்டும்.
*****************
1983 ஆகஸ்டு 15-ஆம் நாளைத் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் அன்று கறுப்புச் சின்னம் அணிந்தும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்க விட்டும், பொது இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும் நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் 8.8.1983-இல் சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.
*****************
தமிழன் இறைச்சிக் கடைகளைத் திறந்திருக்கும் ஜெயவர்த்தனே டில்லி வந்த பொழுது, எதிர்த்துக் கறுப்புக் கொடி! கழகப் பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர் (23.11.1983).
*****************
ஈழத் தமிழர் பிரச்சினையில்  உலகத் தமிழர்கள் உணர்ச்சி எரிமலையாக விண்ணில் ஒரு காலும் - மண்ணில் ஒரு காலும் வைத்து கிளர்ந்து நிற்கின்றனர். என்பதை உலகுக்குக் காட்டும் மாநாடுகள் மதுரை மாநகரில் (17,18-_12_-1983) நடத்தப்பட்டன. அந்த ஈழ விடு தலை மாநாட்டில் தோழர் குமரிநாடன் ஈழ விடுதலை கொடியை ஏற்றினார்.
*****************
இங்கிலாந்தில் பிரிட்டிஷ் நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் கையொப்பமிட்டு கூட்டு அறிக்கை வெளியிடச் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் கி. வீரமணி, ப. நெடுமாறன், எல். கணேசன் எம்.பி., ஆகியோர் இப்பணியில் உடனிருந்தனர். (29.7.1984).
*****************
ஈழத் தமிழர் பிரச்சினை-யில் இந்திய நடுவணரசு காட்டி வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து நாடெங்கும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியில் பொதுச் செயலாளர் அதற்காகக் கைது செய்யப் பட்டார். நாடெங்கும் அய்யாயிரம் தோழர்கள் கைதாயினர்.
ஈழப் பிரச்சினை என்ற முறையில் டெசோ உருவாக்கப்பட்டது. (TESO - TAMIL EALEM SUPPORTERS ORGANISATION)  உருவாக்கப்பட்டது. (13.5.1985)
*****************
இல்லினாய்ஸ் கருத்தரங்கில் 15.7.1986: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் குறித்த கருத்தரங்கம் - டாக்டர் இளங்கோ ஏற் பாட்டில் நடந்தது. இதில் 25 நிமிடங் கள் ஆங்கில உரையாற்றிய தமிழர் தள பதி - இலங்கைப் பிரச்சினைக்கு  தமிழ் ஈழமே தீர்வு என வலியுறுத்தினார்.
*****************
பெங்களூர் சார்க் மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே வந்தபோது நமது எதிர்ப்புணர்வைக் காட்டும் வகையில் தமிழ்நாடெங்கும் ஜெயவர்த்தனே கொடும்பாவி கழகத் தோழர்களால் எரியூட்டப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (17.11.1986).
*****************
ஈழப் போராளிகளின் தொலைத் தொடர்பு கருவிகளை எம்.ஜி.ஆர் அரசு பறி முதல் செய்தபோது கழகம் கடுமை யாக கண்டித்தது. அரசின் நடவடிக் கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் உண்ணா விரதம் மேற்கொண்டார். உண்ணாவிர தத்தை பொதுச் செயலாளர் கண்டித்து எழுதி னார். மருத்துவமனையிலிருந்து விடுவிக் கப்பட்ட அன்றே பொதுச் செயலாளர் நேரில் வீட்டுக்குக்கூட செல்லாமல் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் (23.11.1986).
*****************
டெசோ சார்பில் ரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தமிழ் நாட்டையே வெறிச்சோடச் செய்யப் பட்டது. (30.8.1985).
*****************
ஈழத் தமிழர்கள்மீது சரித்திரம் காணாத துரோக ஒப்பந்தத்தைத் திணித்த இந்திய அரசைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராஜீவ்காந்தி -_ -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து அதன் சாம்பல் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது (2.8.1987) திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங் கிரசும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின. நாடெங்கும் பல்லாயிரக் கணக்கில் தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.
*****************
9.10.1987 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பார்ப்பன உணர்வோடு செயல்படும் இலங்கைத் தூதர் தீட்சத்துக்குப் பதில் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டுகோள் விடப்பட்டது.
*****************
25.1.1988 இந்தியக் குடியரசு நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தி யப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அழைக் கப்பட்டார். அதனைக் கண்டிக்கும் வகையில் சனவரி 26 அன்று கருப்புக் கொடி ஏற்றவும் - ஜெயவர்த்தனேயின் கொடும்--பாவியைக் கொளுத்தவும் திராவிடர் கழகம் அறிவித்தது. எங்கெங் கும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டனர். சென்னையில் கொடும் பாவியைக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கழகப் பொதுச் செயலாளர்  கி. வீரமணி உள்பட கழகத் தோழர்கள் பலரும் காயம் அடைந்தனர். கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர் கள் கைது செய்யப்பட்டனர். 7.6.1988 பிரபாகரன் உயிருக்குக் குறி வைக்காதே! என்று குரல் கொடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவம் தலைமையகம்முன் ஆர்ப்பாட்டம்
*****************
28.7.1988 - 22.8.1988 உலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல் படும் சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திட கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனடா, அமெரிக்கா சுற்றுப் பயணம்.
*****************
10.9.1988 கால் ஊனமுற்று வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்திக்கச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது.
*****************
14.5.1989 இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட் டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளல் (29,30.4.1989) வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு (14.5.1989).
*****************
24.7.1989 மாவீரன் பிரபாகரன் சுட்டுக்கொலை என்று கோழைத்தன மாகக் கிளப்பப்பட்ட புரளியை எதிர்த்து உலகிற்கு உண்மையை எடுத்துரைத்த முதல் தலைவர் வீரமணி.  முதல் ஏடு விடுதலை (24.7.1989).
*****************
1.8.1995 ஈழத் தமிழர் படுகொலை யைத் தடுத்து நிறுத்த அய்.நா.விடம் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திராவிடர் கழகம் இன்று தொடங்கியது. 31.9.1995 அன்றுவரை இப்பணி நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டது.
*****************
28.5.1997 சென்னை பெரியார் திடலில்  ஈழத் தமிழர்ப் பிரச்சினை பற்றி முடிவு எடுக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது.
*****************
26.7.1997 தமிழக மீனவர் பாதுகாப்பு, கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண் டசு, மருத்துவர் ச. இராமதாசு, பழ. நெடுமாறன், கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து-கொண்டனர்.
29.7.1997 கச்சத்தீவு உரிமை தமிழக மீனவர் பாதுகாப்பு கோரி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. (வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது).
*****************
14.12.1997 ஈழத் தமிழர் ஆதரவு பன் னாட்டு மாநாடு டில்லி-யில் நடை பெற்றது. முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களை அமைப் பாளராகக் கொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடு மாறன் மற்றும் பன்னாட்டுத் தலை வர்கள் பங்கு கொண்டனர். அரங்கில் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டசு இல் லத்தில் நடத்தப்பட்டது. நடுநிலை யாளர்கள் முன்னிலையில் விடுதலைப் புலிகள் -_ இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*****************
22.12.2006 ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. திமுக., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக செல்வப் பெருந் தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு  அணி வகுக்கப்பட்டது.
ரயில் மறியல் உள்ளிட்ட போராட் டங்கள் இன்னும் ஏராளம் உண்டு.
உரத்த குரலும் - உதிரத் துடிப்பும்! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக் கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற் கப்பட்ட ஒன்று.
அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை.
ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார்.
சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்)
அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது. நியாயப்படி -_ ஏன்சட்டப்படியும்கூட இந்திய அரசு அதனை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்க வேண்டாமா? கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பினை - 1988-ஆம் ஆண்டு முடிவுக்குள் எடுக்க வேண் டும் என்று ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கூறுகிறதே - அதன்படி இலங்கை அரசு ஏன் நடக்கவில்லை என்று இந்திய அரசு கேட்கத் தவறியது ஏன்?
இரண்டு நாடுகளுக்கிடையே ஏற் பட்ட ஒப்பந்தத்தை விசாரணை நடத்த ஒரு நாட்டு நீதிமன்றத்திற்கு அதிகார மும் உண்டா? அது சர்வதேச சட்டத் தின் கீழ் அல்லவா வர வேண்டும்?
இதுபற்றியெல்லாம் இந்திய அரசோ, அதற்கு ஆலோசனை கூறும் ஆசாமி களோ சிந்திக்காதது ஏன்? சிந்திக்க மனம் இல்லாமல் போன மர்மம் தான் என்ன? வடக்கு - கிழக்கு இணைப்பு செல் லாது என்ற தீர்ப்பைப் பெற்றதுடன், கிழக்கு மாகாணத்துக்குத் தனியே தேர்தல் நடத்தி (2.5.2008) விடுதலைப் புலிகளுக்குத் துரோகம் செய்த கருணா குழுவி லிருந்து பிள்ளையான் என்ற ஒருவரை - பிடித்து வைத்த கொழுக் கட்டையாக   முதல் அமைச்சராகவும் ஆக்கி, இலங்கை யில் பட்டொளி வீசிப் பறக்கும் பரந்த ஜனநாயகத்தைப் பாரீர்! என்று உலகத்தை ஏமாற்றிட மிளகாய்ப் பொடி தூவினார் அதிபர் ராஜபக்சே!
தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தில் 1948-இல் இலங்கை சுதந் திரம் அடைந்தபோது சிங்களர்களின் சதவிகிதம் வெறும் எட்டே! இப்பொ ழுது அது 30 சதவீதமாக பெருகியது எப்படி? இலங்கை அரசின் திட்டமிட்ட ஏற்பாடு அல்லவா!
இப்படிப்பட்ட ஜனநாயக நாட்டின் குடியரசு தின விழாவில் பங்கேற்கத்தான் இந்தியப் பிரதமர் செல்வதாக இருந்தார்.
அதனை எதிர்த்து  திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் (31.12.2007) வீண் போகவில்லை.
என்றாலும், இந்தியாவின் கரிசனம் எப்பொழுதுமே இலங்கை அரசின் பக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது.
செக் குடியரசு நாட்டிலிருந்து  10 ஆயிரம் ஏவுகணை களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கியது இலங்கை அரசு. ஈரான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரிய அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவித்தது.
பாகிஸ்தானிலிருந்து இராணுவத் தினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. உக்ரைன் நாட்டுக்காரர்கள் இலங்கையின் போர் விமானங்களை இயக்கினார்கள்.
சீனாவிடமிருந்து ரேடார்களையும், பிற கருவிகளையும் வாங்கிக் குவித்தது.
இந்நிலையில், இந்தியாவும் தன் பங்குக்கு இலங்கைக்கு போர் ஆயுதங் களை வழங்கியது.
2008 ஜூன் மாதத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரா யணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர்மேனன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜயசிங் ஆகியோர் கொழும்புக்குச் சென்றனர்.
சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கக் கூடாது; மாறாக இந்தியாவிலிருந்து தான் வாங்க வேண்டும் என்று சொன்னதாகச் செய்திகள் வெளிவந்தன.
அதற்கு முன்பே இரு ரேடார் கருவிகளையும், தற்காப்பு ஆயுதங் களையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியது.
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா வில் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டதும் உண்டு.
டேராடூன், புனே, தேவவாலி, அகமத் நகர், ஜபல்பூர், வதோதரா, மவ் ஆகிய இடங் களில் வழங்கப்பட உள்ள தாகச் செய்திகள் வெளி வந்தன.
தமிழ்நாட்டிலும் அத்தகு பயிற்சி அளிக்கப்படும் என்ற செய்தி வெளி வந்தபோது, வெடித்த எதிர்ப்புக் குர லால் அது தவிர்க்கப்பட்டதும் உண்டு.
தீவிரவாதிகளை எப்படி எதிர்ப்பது, காட்டுப் பகுதிக் குள் சண்டை போடுவது எப்படி? என்பதற்கெல்லாம் மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் பயிற்சியளிக்கப்பட்டது.
இலங்கை பல நாடுகளி லிருந்தும் ஆயுதங்களை வாங்குவது எதற்காக? இந்தியா இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதெல்லாம் எதற்காக?
இலங்கைக்கு எந்த நாட் டின் மூலம் ஆபத்து? சீனா படையெடுக்கத் துடிக்கிறதா? பாகிஸ்தான் பாய்ந்திட திட்டமிட்டுள்ளதா?
இந்தியாதான் இலங்கை மீது படை எடுக்கப் போகிறதா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்பது அறியாப் பிள்ளையும் அறிந்த செய்தியாகும். இவ்வளவு ஆயுதக் குவிப்புகளும், பயிற்சிகளும் எதற்காக? இலங்கைத் தீவில் உள்ள அந்த மண்ணுக்கே உரிய தமிழர்களை முற்றாகக் கொன்று ஒழித்து, புதைகுழிக்குள் தள்ளி இலங்கை என்றால் சிங்கள நாடே! சிங் களவர்கள் மட்டும்தான் இங்கே வாழ வேண்டும் என்கிற வெறித்தனத்துக்கு முடி சூட்டத்தானே இந்த மூர்க்கத் தனம்?
இலங்கை அரசு அப்படியென்ன இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டிக் கிழித்து விட்டது? இந்தியா - சீனா யுத்தத்தின் போதோ, இந்தியா - பாகிஸ் தான் போரின் போதோ இந்தியாவின் பக்கம் நின்றதா என்ன? 1965-இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது கூட காட்டுநாயகா விமானத் தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள நடைபாவாடை விரிக்கவில்லையா?
இந்தியாவே என்ன சொல்லுகிறாய்? சீனாவுக்கோ பாகிஸ்தானுக்கோ, ஏன் அமெரிக்காவுக்கோ இராணு வத் தளம் அமைக்க இடம் கொடுத்து விடுவேன் - ஜாக்கிரதை என்ற இலங்கையின் மிரட்டலுக்கு தமிழர்களைப் பலி கொடுக்க இந்தியா சித்தமாகி விட்டது என்ற குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தப் படக் கூடியதல்ல! ஈழத்தில் வாழும் தமிழர்களுக்குத்தான் இந்தக் கொடூரம் என்றால், கடலில் மீன் பிடிக்கச் செல் லும் தமிழக மீனவர்களையும் சிங்களக் கடற்படை வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்களை அயிரை மீனாகக் கருதி குழம்பு வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குச் சொந்த மான கச்சத் தீவை - தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறா மலேயேகூட தூக்கிக் கொடுத்து விட்டது. அதன் பலன் தமிழக மீனவர்கள் தங்களுக்குரிய கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை.
தமிழகத்தின் அனுமதி யில்லாமல் தூக்கிக் கொடுக் கப்பட்ட பகுதியில் -தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையைக்கூட, ஒரு சுண் டைக்காய் அரசிடமிருந்து பெற்றுத் தர முடியவில்லை இந்தியாவால்.
உலகில் பத்துக் கோடிக்கு மேற் பட்ட தமிழர்கள் வாழ்ந்தாலும் - சொந்தத்துக்கென்று ஒரு நாடு இல்லாத நிலையில் இதனையெல்லாம் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த நாதியில்லாமல் போய்விட்டது என்பதுதானே உண்மை!
ஒரு கொடுங்கோலனைக் கூண்டில் ஏற்றுவோம்!
கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சே கூண்டில் ஏறும் காலம் வந்துவிட்டது; பல்லாயிரக்கணக்கான தமிழர் களைப் பலி கொண்ட  பாதகன் பாரோர் பரிகசிக்கும் வகையில் பன் னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. -   கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். இதனைத் தெரிவித்திருப்பது சிறீலங்கா அரசின் கச்சேரி  (Local Govt., Office)  என்ற அமைப்பாகும்.
இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படை யினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நாவின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.
எஞ்சிய 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள்?
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரத்தை மகிந்த ராஜபக்சே அமைத்த குழுவின் முன் (LLRC)  தெரிவித்துள்ளனரே!
உண்மை இவ்வாறு இருக்கும்போது, இலங்கை இராணுவம் அறிவித்த மூன்று பாதுகாப்பு வளையங்களுக்குள் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 70 ஆயிரம் மட்டுமே என்று குறைத்துக் கூறியதன் மர்மம் என்ன?
படுகொலை செய்யப்பட்ட தமிழர் களின் - எண்ணிக்கையை மறைப்பதற்குத் தானே!
இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற தமிழர் களையாவது காப்பாற்றினார்களா? கண்மூடித்தனமான பீரங்கித் தாக்கு தலால் கொலைகார ஹிட்லர்கள் சிட்டுக் குருவிகளை போல சுட்டுத் தீர்த்தனரே!
ஆயிரம் கோயபல்சுகளும் இந்தக் கொடிய ராஜபக்சேவுக்கு ஈடாக முடியுமா?
விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை, ஒருவரைக்கூடக் கொல்லாமல் (with Zero Civilian casuality) அனை வரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக நாக் கூசாமல் கூறியதை என்ன சொல்ல!
அய்.நா. அமைத்த மூவர் கொண்ட வல்லுநர் குழு - ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பட்டவர்த் தனமாக அறிவித்துவிட்டதே!
இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக் காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென் ஆப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவர் அடங் கிய குழு தனது அறிக்கையை அய்.நா .வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அளித்துவிட்டது (13.4.2011)
இந்த அறிக்கையை சிங்கள அரசு நிராகரிக்கிறதாம்; இந்த அறிக்கைக்கு எதிராக சிங்கள மக்களைக் கிளர்ந் தெழச் செய்யும் கீழ்த்தரமான வேலை யில் இறங்கி விட்டார் ராஜபக்சே!.
குருதியை உறையச் செய்யும் குரூரமான செயல்களை அய்.நா. வல்லுநர் குழு அறிக்கை பட்டியலிட்டு விட்டது. போர்க் குற்றங்களைக் கண்டிப்பாகச் செய்தது சிங்கள இராணுவம் என்பதற்கு ஏராளமான தகவல்களை வாரிக் கொட்டியுள்ளது.
கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட் டன - அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த உணவு வழங்கப்படும் மய்யங் கள்கூட இராணுவத்தின் தாக்குதலுக் குத் தப்பவில்லை - மருத்துவமனைகளும் குறி பார்த்துத் தகர்க்கப்பட்டன.
சிங்கள இராணுவத்தின் வெறியாட் டம் வெளி உலகத்தில் வெளிச்சத்துக்கு வரக்கூடாது என்பதற்காக ஊடகக் காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சமாதான வெண் கொடியை ஏந்திச் சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத் தைச் சேர்ந்த நடேசன் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவ்வளவையும் செய்துவிட்டு, டைம்ஸ் ஏடு கணிக்கும் ஆற்றல் - வாய்ந்த உலகத்தில் உள்ள நூறு பேர் களுள் தாமும் ஒருவர் என்று அறிவிக் கப்பட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து, அய்.நா. மன்றத்து முயற்சியின் கண் களில் மண்ணை அள்ளிப் போடலாம் என்று திட்டமிட்டார் - அந்தோ! பரி தாபம், அது கருவிலேயே சிதைந்து விட்டது.
இப்பொழுது ராஜபக்சேயின் ஒரே நம்பிக்கை - இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் நாடுகள் நம்மை எப்படியும் கைவிடாது என்பதுதான்.
அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் அடிநாதம் (26.5.2009).
இந்த மனிதநேயத் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்ததில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான்.
இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங் கரே என்பவர் அய்.நா வில் என்ன பேசினார் தெரியுமா?
இந்தக் கூட்டமே அவசியமற்றது; உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில்  தோற்கடித் ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதனைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்று பேசினாரே!
சீனா, ருசியா, பாகிஸ்தான் உள் ளிட்ட நாடுகள் கொடுங்கோலன் ராஜபக்சேயின் பாசிசப் போக்கிற்குப் பச்சைக் கொடி காட்டி, வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் தங்களுக்கான இடங்களை முன்பதிவு செய்து விட்டனர். இதைவிட கேவலம் - இலங்கை அரசு கொண்டு வந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான்.
பான் கீ முன் அமைத்த வல்லுநர் குழு இதுபற்றிக் கூறியுள்ள கருத்து மிக மிக முக்கியமானது.
2009 மே 26 அன்று நிறைவேற்றப் பட்ட தீர்மானம் (எண்  A/HRC/8-11/L.I (Rev2)  மாற்றியமைக்கப்பட வேண் டும்; இதற்காக அய்.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு தெரிவித் துள்ளது.
இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை மட்டுமல்ல;  உலக நாடுகள் முன் மனித உரிமை, மனிதநேயம் ஆகிய பண்புகள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை - அய்.நா.வின் வல்லுநர் குழு அறிக்கையின்படி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பன்னாட்டு நீதி மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப் பட்டு போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
பிரிவினை வந்தது எப்பொழுது?
1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி (only Sinhala Act) என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சியினர் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தினர்.
கொழும்பில் உள்ள காலிமுகத் திடல் என்னும் இடத்தில் அறவழியில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்கள வெறியர்கள் வெறி கொண்டு தாக்கினர். சிலரை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் தூக்கி ஏறிந்தனர்.
குருதி சொட்டச் சொட்ட அடிபட்ட தமிழர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமராக இருந்த பண்டார நாயகா அடிபட்டவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தார். எதற்காக இப்படி உதைபடுகிறீர்கள்? சிங்கள வர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள். இனிமேல் சிங்களம்தான் ஆட்சி மொழியாக இருக்கும் என்றார்.
தனியீழம் கேட்டது எல்லாம் பிற் காலத்தில்தான். எல்லா வகைகளிலும் அறப்போரில் ஈடுபட்டு கடைசிக் கட்ட மாகத்தான் பிரிவினைக் கோரிக்கையை கையில் எடுத்தனர்.
இலங்கை உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி கூறுகிறார்
இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் என்சில்வா முகாமைப் பார்வையிட்டுச் சொன்னார். இவ்வளவுக்கும் அவரும் ஒரு சிங்களவர் தான்.
நமது நாட்டின் சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது -_ தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்க மாகவே வெளிப்படுத்துகிறேன். இந் நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன்மூலம் இலங்கை அதிகாரி களால் நான் தண்டிக்கப்படலாம் கவலையில்லை என்று கூறினாரே - இதிலிருந்து ஈழத் தமிழர்களின் நிலையை அறியலாமே!
முகாம்களின் நிலை
முகாம்களில் முடக்கப்பட்டுக் கிடந்த தமிழர்களின் 24 ஆயிரம் பேர்களுக்கு அம்மை நோய், 4000 பேர்களுக்கு மஞ்சள் காமாலை நோய். 5 பேர் தங்கக் கூடிய குடிசையில் 20 பேர்களாம். இவர்களைக் கண்காணிக்க 1200 சிங்கள இராணுவத்தினர்.
அடிப்படை வசதிகள் எதுவும் செய் துத் தரப்படவில்லை. ஆனால் ராஜ பக்சே என்ன கூறுகிறார்?
The largest humanitarian rescue operation in human history  என்கிறார்.
(மனித குல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையாம்) வன்னிப் பகுதியை மீட்டுருவாக்க 19 பேர் கொண்ட குழுவாம். குழுவின்
ஆலோசகர் யார் தெரியுமா?
அதிபர் ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேதான் குழுவின் தலைவராம். ஆட்டு மந்தைக்குச் சட்டாம்பிள்ளை நரியாம் அவரின் இன்னொரு உடன் பிறப்பும் இராணுவ ஆலோசக ருமான கோத்தபய ராஜபக்சே குழுவின் உறுப்பினராம். மொத்தம் 19 பேர்களில் 18 பேர் சிங்களவர்கள் மற்றும் ஒருவர் முசுலிம். ஈழத் தமிழர் யாரும் கிடையாது.
போர்க் குற்றவாளிகள்
சூடான் நாட்டின் அதிபர் அல்பஷீர் சூடான் மக்கள்மீது மனித உரிமைகளுக்கு மாறான குற்றங்களை, வன்முறைகளை இழைத்ததற்காக பன்னாட்டு நீதிமன்றத்தார் பிடிவாரண்டுக்கு ஆளாக்கப்பட்டதுண்டு.
*****************
8000 செர்பிய முசுலிம்களைப் படுகொலை செய்த ஜெனரல் ராட்கோ மிலாடிக் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார்.
*****************
அந்த வரிசையில் ராஜபக்சேவுக்கு அதிக வாய்ப்பு உண்டு.
பார்ப்பனர்களின் நிலைப்பாடு
கேள்வி: ஜெயலலிதா ஆட்சியின்போது புலி ஆதரவு மாவீரர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?
பதில்: ஜெயலலிதா ஆட்சியின்போது புலி ஆதரவாளர்கள் எங்கே போக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்; மவுனம் சாதித்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்போது எங்கே போயிருந் தார்கள் என்று இப்போது கேட்கிறீர்கள்.
(துக்ளக் 25.2.2009)


.